Sunday, 9 October 2011

எங்க ஊரு காவல்காரங்கள்


அகிரா குரொசவா ஜப்பானிய சினிமாவில மட்டுமில்ல, உலகளாவிய சினிமா அரங்கிலும்அறியப்பட்ட ஒரு தலை சிறந்த இயக்குனர். ( புண்ணியவான் தமிழ் நாட்டில பிறந்திருந்தால் புரட்சி இயக்குனர் பட்டமும் எதாவது சந்துக்குள்ள இருக்கிற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் குடுத்திருக்கும்)
சில காட்சிப்படுத்தல்களை சினிமாவின் மூலம் இன்னும் அழகாகக் காட்டமுடியும். குறிப்பிட்ட நிமிடங்களே ஓடக்கூடிய சினிமாவை நச்சென்று காட்டக்கூடிய காட்சியமைப்பின் மூலம் சொல்ல வந்த விஷயத்தின்ர ஆழத்தைக் காட்டமுடியும். இதை கமரா உத்தி மற்றும் திரைக்கதை அமைப்பு மூலம் சாத்தியப்படுத்தலாம். ஒரு மேடை நாடகத்தில் இருந்து சினிமா வேறு படுவது இதில் தான். ( இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர்).

பக்கம் பக்கமாகப் பேசக்கூடிய காட்சிவடிவத்தைக் சில நிமிட கமராக் கோணம் மூலமும் கமராவினுடைய மிகச்சரியான இயக்கம் மூலமும் காட்சிப்படுத்தலை சினிமாவுக்குள்ள புகுத்தியவர் தான் இந்த அகிரா. இன்றைய மணிரத்னம் படங்கள் இவரின்ர உத்தியத் தான் எடுத்து அதிக அளவில் பயன்படுத்துகின்றார். (அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள்)

இந்த உத்தியின் ஒரு வடிவத்தை சின்ன உதாரணம் மூலம் சொல்லுறன்.
வில்லன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதாக காட்சி என்றால் அதை உருவகப்படுத்த ஒரு புள்ளி மானை ஒரு சிறுத்தை கோரமாகக் கடித்து உண்பது திரையில் வரும்.
இது ஒரு சாதாரண உதாரணம். இது போல் பல உத்திகளைக் அறிமுகப் படுத்திய புண்ணியவான் இந்த அகிரா. 1990 ஆம் ஆண்டில இவருக்கு சிறப்பு ஓஸ்கார் விருதும் கிடைச்சது.

அண்மையில் அகிராவின் “Seven Samurai” (Shichinin no samurai, 1954 Japan 200mins) என்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது.சமுராய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் "போர் வீரன்" என்றும் விளக்கம் வரும்.

1954ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 16ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் நகரும் கதை இதுதான். ஜப்பானிய விவசாயக் கிராமம் ஒன்று வழிபறிக் கொள்ளையர்களின் தொடர்ச்சியான சூறையாடல்களால் தவிக்கின்றது. தமது உடைமைகளையும், பயிர்ச்செய்கைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அந்த விவசாயிகள் இனியும் இது தொடர்கதையாகக் கூடாது என்று முடிவு எடுத்து ஊர்ப் பெரியவரைச் சந்திக்கிறார்கள். இவரின் ஆலோசனைப்படி (Find hungry samurai) சமுராய் அதாவது காவல் வீரர்களை அமர்த்திக்காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டு தகுந்த தலைவனைத் தேடுகின்றார்கள். மிகுந்த சிரமங்களின் பின் தலைவன் ஒருவனைக் தேர்ந்தெடுத்து அவனோடு ஏழு பேராக இணைந்து அந்த ஊரைக் காப்பாற்றக் கொள்ளையர்களைத் துரத்தியடிப்பது தான் கதை.

சாதாரண மசாலா சாயம் தோய்ந்த கதைக் கருவாக இருந்தாலும் 50 களில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்து அகிரா நன்றாகவே இயக்கியிருக்கிறார். இப்ப்டத்தைப் பார்க்க முன் அந்தக் கால கட்டத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்திக்கொண்டு தான் ரசிக்கவேண்டும்.


ஊரைக்காவல் காக்கும் சமுராய்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நல்ல சாப்பாடு மட்டுமே. இப்படத்தின் முதல் பாகம் கொள்ளையர்களால் ஊர் மக்கள் படும் தொல்லையும், தகுந்த சமுராயைத் தேடுவதிலுமாகக் கழிகின்றது.
அடுத்த பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுராய்களின் தலைவன் தன் வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தாக்குதல் நடவடிக்கைகள் என்று கழிகின்றது.
ஊர்மக்களுக்கும் சமுராய் வீரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அந்த இடைவெளி, என்ன தான் கொள்ளைக்காரர்களைக் கொன்று சமுராய் வீரர்களை இழந்தாலும் தொடர்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த சமுராய் வீரர்களின் புதைகுழிகளில் அசைந்தாடும் தம் கொடியைப் பார்த்த வண்ணம் சமுராய்களிள் தலைவன் சொல்வான். " இந்த ஊர் விவசாயிகள் இப்போது வென்று விட்டார்கள் நாம் தோற்று விட்டோம் என்று. ( அவன் சொல்லும் தோல்வி, இந்த ஊர்மக்கள் சமுராய்களோடு நட்புப்பாராட்டாததைக் குறிக்கின்றது). நெஞ்சம் கனக்கும் முடிவு அது.

ஆரம்பத்தில் கூறியது போன்று அகிராவின் திறமையான இயக்கத்தை காட்டப் பல காட்சிகள் உள்ளன. எந்த இடத்தில் காட்சியை மையப்படுத்த வேண்டும், பொருத்தமான இசை எங்கே வரவேண்டும் போன்ற சந்தர்ப்பங்களும், ஒரு சாதாரண ஜப்பானியக் கிராமம் ஒன்று அதன் இயல்புகெடாமல் காட்டப் படுவது மற்றும் சண்டைக் காட்சிகளின் வீரியத்தை வெளிப் படுத்த கமராவை எப்படிக் கையாள வேண்டும் என்றும் இப் படம் பாடம் எடுக்கின்றது.

படத்தின் ஆரம்பக்காட்சியமைப்பு இவ்வாறு உள்ளது.
கொள்ளையர்கள் ஊருக்கு வருவதைக் கிராமவாசி ஒருவன் காண்கின்றான். தொடர்ந்து வரும் காட்சிகளில் திரளானோர் கூடி நின்று என்ன செய்வது என்று கூடிப் பேசுவது தொலை தூரக் காட்சியமைப்பாகவும் (long shot)
தொடந்து காட்சி மாறி இரண்டு மூன்று பேர் கூடிப் நின்று பேசுவது அண்மித்த காட்சியாகவும் ( close shot) திடீரென மிக நெருக்கமான காட்சிபடுத்தலாக ஒருவனை மையப்படுத்திக் (close up) கமரா நகரும் போது "இதற்கு ஒரே வழி இந்தக் கொள்ளையர்களைக் கொல்வது" என்று அவன் சொல்வதுமாக அமைகின்றது. இதைப் போல எந்தத் சூழ்நிலைக்கு எந்த முறையில் கமராவின் கோணத்தை அமைப்பது என்று பல காட்சிகளைக் காட்டலாம்.

1954 venice film festival இல் silvar lion மற்றும் கலையமைப்பு & அரங்க அமைப்புக்காகவும், உடையலங்காரத்திற்காகவும் இரண்டு ஒஸ்கார் விருதையும் எடுத்தது மட்டுமன்றி திரைப்படம் எடுக்கும் கலாரசிகர்களுக்கு இன்றும் பால பாடமாகத் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் இன்னும் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்தப் படம் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்ததோடு
பசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால் சிதைந்த இந்த நாடு தன் பண்பாட்டு விழுமியங்களையும் தேசப் பற்றையும் மீண்டும் தூக்கி நிறுத்த எழுந்த படைப்பாகவும் திரையுலக வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.
சிதைந்து போன தன் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வரு குடிமகனும் சமுராயாக மாறவேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
அதனாலோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் நினைவில் வந்து மறைகின்றது.
குறிப்பாக சமுராய் வீரர்கள் முதலில் தம்மை அடையாளப் படுத்தக் கொடியொன்றைத் தயார்படுத்துவது, களத்தில் பயிற்சி எடுப்பது, எதிரியைத் தேடிச் சென்று வலிந்திழுத்துத் தாக்குவது, கரந்தடிப் ப்டைத் தாக்குதல் என அவை எம் களச் சூழலையும் நினைவுபடுத்துகின்றன.

No comments:

Post a Comment