Monday 24 October 2011

பாலு மகேந்திராவின் கதை நேரம்



வீட்டில் அப்போது கேபிள் இணைப்பு இல்லை. அதற்க்கு சொல்லப்பட்ட காரணம் , எனது படிப்பின் லட்சணம். எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுத்த அப்பா ஏனோ இதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து விட்டார். ஒரு அளவை மீறி கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்ததால் வந்த விளைவு. வீட்டில் குவிந்து கிடந்த புத்தகங்களால் தொலைக்காட்சியைக் கிட்டத்தட்ட மறந்திருந்த நேரம். அப்போது வந்த வார இதழ் ஒன்றில் பாலு மகேந்திரா தொலைக்காட்சியில் நாடகம் இயக்கப் போகிறார் என்று செய்தி இருந்தது. அய்யோ பாலு மகேந்திராவின் நிலை இப்படியா ஆக வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அதன் பின்னர் தான் தெரிந்தது தமிழ் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த சிற்கதைகளை குறும்படங்களாக இயக்கப் போகிறார் என்று.
ஒரு மாலை நேரச் சூழலில் அம்மா போட்டுக் கொடுத்த தேநீருடன் பாலு மகேந்திராவின் படம் பார்க்கும் அனுபவமே அலாதி. ஏனோ அப்பாவிற்கு பாலு மகேந்திராவை சுத்தமாகப் பிடிக்காது. காரணம் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா. ’மூன்றாம் பிறைபார்த்து விட்டு நான் அழுத அழுகையில் இனிமேல் அந்த படத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால்சந்தியா ராகம்’,’வீடு’,’சதிலீலாவதி’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலித்திருக்கவில்லை.
எப்படியாவது இந்த தொடரைப் பார்க்க வேண்டும் என்று அம்மாவிடம் கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கொக்கி போட்டு பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு முறை நண்பனின் வீட்டிற்கு சென்ற போது, அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படமாக்கப் பட்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் தலைப்பு கூட நினைவில்லை. ஒரு பிராமணருக்கும், அவர் வீட்டின் எதிரில் தள்ளுவண்டியில் மீன் வறுத்து விற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதை. அதற்கு பின் ஒரு எபிஸோட் கூட பார்க்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து நானும் நண்பர் முரளியும் உரையாடிக் கொண்டிருந்த போது இதைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் சமீபத்தில்
பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது கதை நேரம் டி.வி.டியைக் காட்டியதாகவும், அது பவா செல்லத்துரை அவர்களின் வம்சி பப்ளிசர்ஸ் வாயிலாக வெளி வரப் போவதாகவும் கூறினார். ஒரு வேளை இப்போது வந்து இருக்கலாம், எதற்கும் டி.நகர் நியூ புக் லேண்டில் பார்க்கலாம் என்று கூறினார். கி.ராவுடன் ஞாநியின்கேணியில் நடந்த சந்திப்பிற்கு மறுநாள் நானும் அவரும் அங்கு சென்றோம். நாங்கள் நினைத்தது போலவே அங்கு டி.வி.டி இருந்தது.

கதை நேரத்தில் மொத்தமாக 52 குறும்படங்கள். டி.வி.டியின் முதல் பாகமான இதில் ஆறு குறும்படங்கள் இருக்கின்றன. சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', சுஜாதாவின் 'நிலம்', பிரபஞ்சனின்’ஒரு மனுஷி', திலகவதியின் ‘ஒரு முக்கோண காதல் கதை’, சு.சமுத்திரத்தின் ‘காத்திருப்பு’ மற்றும் ஜெயந்தனின் காயம்’ ஆகிய சிறுகதைகளை இந்த முதல் பாகத்தில் தொகுத்து உள்ளனர்.

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'
சு. ராவின் 'பள்ளம்' என்னை மிகவும் பாதித்த கதை. ஆனால் அதை படமாக்குவது முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் அவரின் படமாக்கக் கூடிய கதைநாடார் சார்’. 1997 ‘தினமணிபொங்கல் மலரில் வெளியானது. நான் எட்டாம் வகுப்பு படித்த போது வெளிவந்த அந்த கதையில் இருந்த சூழலும், என் பள்ளி சூழலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது. அந்த கதையை நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எனது மனதில் அது ஒரு குறும்படமாகவே ஓடும்.

’பிரசாதம்’ கதையை இது வரை வாசித்தில்லை. பாலு மகேந்திராவின் திரை மொழியில் மிகவும் எளிமையான கதையாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. ஒரு அதிகாலையில் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒருவருக்கு, பக்தர் ஒருவர் நூறு ரூபாயை காணிக்கையாக இடுகிறார். அடுத்த காட்சி கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தங்களின் குழந்தைக்கு காது குத்துவதற்காக தன் கணவரிடம் ஒரு நூறு ரூபாய கேட்பதாக அமைகிறது. இதற்கு பிறகு நீங்களே கதையை ஊகித்து இருப்பீர்கள்.

மிகவும் சிக்கலான விடயங்களை, ஒரு வித எள்ளல்தன்மையோடு அனுகும் பாலு மகேந்திராவின் பாணி, இந்த குறும்படம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. கான்ஸ்டபிளாக ஜீனியர் பாலையா, அவரின் மனைவியாக மெளனிகா நடித்து உள்ளனர். அந்த பூசாரியாக நடித்தவர் திரைக்கு புதியவர் என்றே நினைக்கிறேன். ஆயினும் அவரின் நடிப்பு ஒரு தேர்ந்த நடிகரின் முதிர்ச்சியை வெளிபடுத்தியது. குறும்படம் முழுவதும் நீங்கள் சிரித்து கொண்டிருந்தாலும், அந்த இறுதி காட்சி எல்லோரின் கண்களில் சிறு நெகிழ்ச்சியையாவது ஏற்படுத்தும்.
சுஜாதாவின் ‘நிலம்’சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்க படும் போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கபடுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்க படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.

தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

சுஜாதாவின் சிறுகதைகள் ஆழமற்றவை என்று பல பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அது உண்மையல்ல. அவரின் கதைகளில் மிகவும் நுண்ணிய தகவல்கள் புதைந்து கிடக்கும். புதிதாக சமகால இலக்கிய படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் மிகத் தெளிவாக புரியும். இதனால் தான் புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு சுஜாதாவின் புத்தகங்களை பரிந்துரைப்பேன்.

‘நிலம்’ கதையையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொணியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மிக கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு ஒரு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்ம ப்ரயத்தங்கள் தான் மீதிக் கதை.

பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’

’எழுத்து ஒரு பிழைப்பு ஆகாது’ என்று விரக்தியின் உச்சியில் குமுதம் ‘ஜங்ஷன்’ இதழுக்கு பிரபஞ்சன் அளித்த பேட்டி தான், அவரைப் பற்றி நான் முதலில் அறிந்தது. அதன் பின்னர் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த அவருடைய ’வானம் வசப்படும்’ நாவலை வாசித்தேன். பாண்டிச்சேரியை ‘ட்யூப்ளக்ஸ்’ ஆண்ட போது அவரின் திவானாக இருந்த ‘அனந்தரங்கரின்’ டைரி குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட சுவாரஸ்யமான நாவல். ‘அனந்தரங்கரின் டைரி குறிப்பை’ திருடி எழுதிவிட்டார் என்ற அபாண்டமான விமர்சனம் இந்த நாவலால் தான் எழுந்தது.

பிரபஞ்சனின் சில சிறுகதைகள் மட்டுமே படித்து உள்ளேன். அவை பெரும்பாலும், 2005, 2006 - ல் ‘தீராநதி’,’உயிர்மை’ இதழ்களில் வெளி வந்தவை. அவரின் ‘மீன்’ சிறுகதையை பொதிகை தொலைக்காட்சியில் குறும்படமாக அம்மா பார்த்த போது, உனக்கும் இதே போல் தான் பொண்டாட்டி வரப்போகிறாள் என்று அம்மா என்னை நக்கலடித்தாள். (இந்த சிறுகதையைப் பற்றி அப்புறம் சொல்றேன்)

சினிமாவில் பணிபுரியும் துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரின் உலகம் வெளிபூச்சுகளற்றது. அவர்களின் வாழ்வில் நிலவும் வெறுமையையும், வறுமையையும் அசோகமித்திரன், சுஜாதா, திலகவதி ஆகியோர் தத்தம் கதைகளில் வெளிபடுத்தி உள்ளனர். அதே வரிசையில் தான் இந்த கதையும் இடம் பெறுகிறது. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பிலிம் ரோல் வாங்க காசு இல்லாமல் இருக்கும் ஒரு உதவி புகைப்பட கலைஞன், தனக்கு தெரிந்த துணை நடிகை ஒருத்தியை புகைப்படம் எடுக்க செல்வது தான் இந்த கதையின் சாரம். துணை நடிகையாக மெளனிகா, புகைப்பட கலைஞராக சஷி நடித்து உள்ளனர். இந்த கதையின் பிண்ணனியில் இந்த தொடர் வெளிவந்த போது நடந்த ஃபெப்ஸி, படைப்பாளிகள் மோதலையும் ஒரு பாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலு மகேந்திரா. அகிரா குரோசாவாவின் படங்களின் இறுதி காட்சிகள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதே போல் தான் இந்த குறும்படங்களின் இறுதி காட்சிகளும்.

இந்த டி.வி.டி இப்போது என் கையில் இல்லை. நினைவிடுக்குகளில் இருப்பதை மட்டுமே உங்களுடன் பகிர்கிறேன். மீதம் உள்ள மற்ற மூன்று குறும்படங்களைப் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

பாலு மகேந்திராவின் கதை நேரம் - 2


கீழ்க்காணும் பதிவு இந்த பதிவின் தொடர்ச்சி...

’ஒரு முக்கோண காதல் கதை’ - திலகவதி

அலுவலகத்தில் ஏற்படும் காதல்களை பற்றி ஒரு பெரிய நாவலே எழுதலாம். அதிலும் பக்கத்து சீட்டில் இருக்கும் நண்பன், நாம சும்மா இருந்தாலும், விடலை பருவத்துக்காரன் போல், “மச்சி!! அவ உன்னையே பாக்குறா பாத்தியா” என்று ஏற்றி விடுவான். மனதும் கொஞ்சம் சிறகடிக்கும், அவள் கல்யாண பத்திரிக்கை தரும் வரை. மறுநாள் ‘கல்யாணி’ அல்லது ‘ஓல்ட் மங்க்” ஏற்படுத்திய சிவந்த கண்களுடன் “இவ போனா இன்னொரு பொண்ணு, வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி!!” என்று தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் அடுத்த காதலில் இறங்குவார்கள். 

திலகவதியின் இந்த கதையிலும் தன் அலுவலகத்தில் தன்னுடன் சாதாரணமாக பழகும் பெண் ஊழியை, தன்னிடம் காதல் கொண்டதாக எண்ணுகிறான் கதையின் ஒரு நாயகன். ஆனால், அந்த பெண்ணோ யதார்த்தமாக வாழ்க்கையை நடத்தும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியரை காதலிக்கிறாள். அவரும் அந்த பெண்ணிடம், தன் காதலை நாசூக்காக தெரிவித்து அவள் அன்பை பெறுகிறார். முன்னவரும் ஒரு தனியான தருணத்தில் அவளிடம் காதலை தெரிவிக்க, அவள் ஏன் அவரை காதலிக்க முடியாது எனக் கூறும் விளக்கம் தான் கதையின் இறுதி. 20 நிமிடத்தில் வழக்கம் போல் தன்னுடைய அருமையான கதை சொல்லல் பாணியில் இந்த குறும்படத்தை காட்சி படுத்தியிருக்கிறார் பாலு மகேந்திரா.

பொதுவாக அலுவலகங்களில் இது போன்று எதிர்பாலிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (காதல் இல்லை), பல சமயங்களில் இது போன்ற மன அழுத்தங்களில் தான் கொண்டு சேர்க்கும். அதுவும் பெரும்பாலான இந்திய ஆண்கள், வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து வைக்கும் வரை ஒரு வித நீண்ட விடலை பருவத்தை (Extended Adolescence) தான் அனுபவிக்கிறார்கள். அவர்களின் உளவியல் சிக்கல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த கதை. காதலில் நிராகரிக்கபட்டவராக நடிகர் பாலா, பெண் ஊழியையாக மெளனிகா மற்றும் யதார்த்த ஊழியராக வேணு அர்விந்த் வெகு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தனர். மிகச் சாதாரணமான கதையாய் தோன்றினாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை.

”காத்திருப்பு” - சு.சமுத்திரம்

சு.சமுத்திரத்தின் கதைகள், பெரும்பாலும் வாழ்வியலை ஓட்டியவை. நான் படித்த அவரின் ஒன்றிரண்டு சிறுகதைகளை நினைவிடுக்கில் தேடி கொண்டிருக்கிறேன். அலுவலகங்களில், முக்கியமாக அரசு அலுவலகங்களில் படிநிலையினால் (Hierarchy) நிகழ்த்தபடும் ஏமாற்று வேலைகள் அளவில் அடங்கா. மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை ஏமாற்றியே பல காரியங்களை சாதித்து கொள்வார்கள்.

அப்படிபட்ட ஒரு ஏமாற்றை பற்றிய கதை தான் இந்த சிறுகதையும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியனான ப்யூனை, அந்த அலுவலகத்தின் மேலதிகாரி தன் சொந்த காரியங்களுக்கு, குறிப்பாக தன் வீட்டு வேலைகளை செய்வதற்கு உபயோகபடுத்துகிறார். அந்த ப்யூனும், தன் மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விடுப்பு வேண்டி, தன் மேலதிகாரி காலால் இட்ட வேலையை தலையால் செய்கிறான்.  ஆனாலும், மேலதிகாரிக்கோ அந்த ப்யூனுக்கு விடுப்பு கொடுக்க மனசில்லை. தன் மகளின் திருமணத்தை நடத்துவதற்கு எடுபிடி வேலை செய்ய உபயோகப்படுவான் என்று கணக்கு போடுகிறார். அங்கு ஊரில், ப்யூனுடைய மனைவி காசநோயினால் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். இறுதியில், அவன் மனைவி ஊரில் இறந்தது கூட தெரியாமல் தன் மேலதிகாரியின் வீட்டில் அந்த பியூன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதாக முடிகிறது கதை.

மேலதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி நம் தமிழ் சினிமாக்கள் சொல்லி, சொல்லி மாய்ந்து விட்டன. இருப்பினும், அதிலிருந்து சற்றே வேறுபட்ட கதை இது.

”காயம்” - ஜெயந்தன்

இந்த குறும்பட தொகுப்பிலேயே என்னை மிகவும் பிடித்த, பாதித்த கதை என்றால் இதுவாகத் தான் இருக்கும். அந்த கதை ஏற்படுத்திய தாக்கமா, அல்லது பாலுமகேந்திராவின் திரை மொழி ஏற்படுத்திய தாக்கமா என்று புரியவில்லை. இந்த குறும்படத்தை அம்மா, அப்பா மற்றும் தம்பியுடன் அமர்ந்து தான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் கொஞ்ச நேரம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. நான் தான் அந்த மெளனத்தை கலைக்க வேண்டி இருந்தது.

குற்ற உணர்வை மையப்படுத்தும் கதைகளை எஸ்.ரா நிறைய எழுதி இருந்தாலும், இத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய கதையை நான் பார்த்தில்லை.  ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இரு குடும்பங்களை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும். இன்னொன்றில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகள். அந்த சிறுமியால் ஒரு சிறு சங்கடம் நேருகிறது. அதன் பின் என்னவாகிறது என்பதே கதை.

இந்த குறும்படத்தை பார்த்த பின் தான் ஜெயந்தன் மறைந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்தது. அவரை பற்றி படித்த போது, வெகுஜன இதழ்களில் பணியாற்றிய தீவிர இலக்கியவாதி என்றும் அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகில், பல படைப்பாளிகள் இல்லாத போது தான், அவர்களின் வெற்றிடம் தெரிகிறது. இந்த பொது விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை”
கமல் தேசிய விருது பெற்றார்
பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் உருவான “மூன்றாம் பிறை”யில் பிரமாதமாக நடித்து தேசிய விருது பெற்றார், கமலஹாசன்.
ஒளிப்பதிவாளராக தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய பாலுமகேந்திரா, 1977-ம் ஆண்டில் “கோகிலா” என்ற கன்னடப்படத்தை இயக்கி டைரக்ஷன் துறையிலும் முத்திரை பதித்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கமலஹாசன். நாயகி ஷோபா. மற்றும் ரோஜா ரமணி, மோகன் ஆகியோரும் நடித்தனர்.
1969-ம் ஆண்டு புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கு பயின்று வந்தபோதே, பாலுமகேந்திராவின் மனதில் “கோகிலா” கதை உருவாகி விட்டது.
ஒரு விமானப் பயணத்தின்போது, “கோகிலா” கதையை கமலிடம் பாலுமகேந்திரா கூறினார். அப்போதே கமலுக்கு கதையின் மீது ஈர்ப்பு ஏற்பட, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ரோஜா ரமணி நடித்த கேரக்டரில் முதலில் நடிகை சில்க் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ரோஜாமணியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
24 நாட்களில் உருவான படம்
24 நாட்களில் 26 பிலிம் ரோல்களில் படத்தை குறித்த நேரத்திலும் சிக்கனமாகவும் எடுத்து முடித்திருந்தார், பாலுமகேந்திரா.
“கலர்ப்படங்கள்” அவ்வளவாக வராத காலம் என்பதால் இந்தப் படத்தையும் கறுப்பு – வெள்ளையில்தான் ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா.
அந்த ஆண்டில் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அதோடு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார்.
இந்தப்படம் கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் கன்னட மொழியிலேயே வெளியிடப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் திரையிடப்பட்ட எமரால்டு தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது.
இந்த சமயத்தில்தான் கே.பாலசந்தர் டைரக்ஷனில் கமல் நடித்த “மரோசரித்ரா” தெலுங்குப்படம் சென்னை சபையர் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரே வளாகத்தில் இருந்த 2 தியேட்டர்களில் கமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
“கோகிலா”வுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 28 வருடங்களாக எந்த கன்னடப்படமும் இதுபோன்ற வெற்றியைக் கண்டதில்லை என்கிறார், இந்தப்படத்தின் உரிமையை வாங்கிய ஆர்.ஜி.வெங்கடேஷ்.
“கோகிலா”வுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பாலுமகேந்திரா தமிழில் “அழியாத கோலங்கள்” படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியபோது கமல் அவரை சந்தித்தார். “உங்கள் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப்படத்தில் நான் இல்லாமலா? நானும் இருக்கிறேன்” என்று உரிமை எடுத்துக்கொண்ட கமல், படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். “நண்பர்களுக்கு கமல் சார் கொடுக்கும் முக்கியத்துவம் இது” என்கிறார், டைரக்டர் பாலுமகேந்திரா. இந்தப்படம் வெற்றி விழாவையும் கடந்து 26 வாரங்கள் ஓடியது.
மூன்றாம் பிறை
இப்படி தனது படத்துக்கு ஒரு “கெஸ்ட்ரோல்” மூலம் மரியாதை கொடுத்த கமலுக்காக பாலு மகேந்திரா உருவாக்கிய கதைதான் “மூன்றாம் பிறை.” கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். படம் 329 நாள் ஓடி வெற்றி பெற்றது.
அதோடு இந்தப்படத்தை “சத்மா” என்ற பெயரில் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் உருவாக்கினார். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.
இந்தப்படம் மூலம் கமலுக்கு இந்தியிலும் “பிரமிக்க வைக்கும் நடிகர்” என்ற பெயர் கிடைத்தது.
தேசிய விருது
“மூன்றாம் பிறை” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 1982-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். அகில இந்திய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலு மகேந்திராவுக்கு கிடைத்தது.
படம் முழுக்க நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்குத்தான் இருந்தது. விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட 18 வயதுப்பெண், 10 வயது சிறுமியின் குணநலன் கொண்ட பெண்ணாக மாற, அவரை `குழந்தை’ போல் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கமலுக்கு வந்து சேர்கிறது. `குழந்தைக்குணம்’ கொண்ட ஸ்ரீதேவிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கேரக்டரில் கமலும் ஜொலித்தார்.
முடிவில் ஸ்ரீதேவிக்கு மன நிலை சரியாகிவிட, இடைப்பட்ட நாட்களில் தன்னை பாதுகாத்த, போஷித்த, உயிரையே வைத்திருந்த கமலை முழுவதுமாக மறந்து விடுகிறார். கமல் பலவிதங்களில் நினைவூட்டிப் பார்த்தும் அவர் நினைவு வளையத்துக்குள் கமல் வரவே இல்லை. கடைசியாய் ஸ்ரீதேவிக்கு பிடித்த `குட்டிகரணம்’ கூட அடித்து நினைவூட்ட முயலும் கமலை “யாரோ பிச்சைக்காரன் பாவம்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் ஸ்ரீதேவி, அவருக்கு கொஞ்சம் சில்லரைக் காசை போட்டு விட்டு ரெயிலில் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார்.
கிளைமாக்சில் தன்னை யார் என்று நிரூபிக்க, கமல் படும் அந்த 5 நிமிட வேதனைகள்தான் நடிப்பில் அவருக்கு தேசிய விருதை தேடித்தந்தது.
இந்தப்படத்தில் நடிகை சில்க் சுமிதாவும் இருந்தார். தனது அதிகபட்ச கவர்ச்சியால் தமிழ்த் திரையுலகை ஆட்டி வைத்திருந்த சில்க், இந்தப் படத்திலும் தனக்கான காட்சிகளில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. கமலுடன் சேர்ந்து “பொன்மேனி உருகுதே” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் காட்சியும் ஒரு காரணமாக அமைந்தது.
மிகுந்த திறமையுடன் பாலு மகேந்திரா உருவாக்கிய “மூன்றாம் பிறை”, ரசிகர்கள் கண்களில் பூரண நிலவாய் இன்றும் ஒளிவிடுகிறது.
திரைப்பட வரலாறு

“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்


பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.
இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-
பாலு மகேந்திரா சந்திப்பு
“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.
நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.
பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.
ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.
“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.
பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.
இளையராஜா
அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.
என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.
அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.
அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.
இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.
இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.
இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.
அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.
நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.
இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.
“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”
பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.
அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.
நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.
இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.
மெட்டுகள்
மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.
அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.
தேசிய விருது கிடைத்தது!
பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
அர்ச்சனா கோபம்
“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.
இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.
மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.
முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.
எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.
புது ஹீரோ
இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.
அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.
விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.
பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.
10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.
பாடல் காட்சி
படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.
நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.
என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.
ரூ.60 லட்சம்
ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.
படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.
இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.
நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.
படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.
தேசிய விருது
படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.
விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.
படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.
நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.
காயத்துக்கு மருந்து
என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”
இவ்வாறு தாணு கூறினார்.
ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவை . இவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி எனும் சிற்றூரில் பிறந்தவர். பெஞ்சமின் மகேந்திரா என்ற பாலு மகேந்திரா யாரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக இல்லாமல் பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலையக் கற்றுக் கொண்டு தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியானது. ஆனால் அதற்கு முன்னரே கேரள அரசின் மாநிலவிருதை ஒளிப்பதிவுக்காக 1972லேயே பெற்றவர். இவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு செம்மீன் படப்புகழ் ராமு காரியாத் தனது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அந்த படத்திற்கு விருது கிடைத்ததைத் தொடர்ந்து சுக்கு, சட்டக்காரி, பணிமுடக்கு போன்ற முக்கியமான மலையாளைப்படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா என்ற கன்னடப்படம். தமிழில் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அதற்குப் பின் மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, இரட்டை வால் குருவி, வீடு, சந்தியாகிரகம், வண்ண வண்ண பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களைத் தமிழில் இயக்கினார். அதே சமயம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இடையிடையே ஓலங்கள், நீரஷ்னா, சத்மா ஆகிய படங்களையும் இயக்கி வந்தார்.
ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தான் சார்ந்த துறை மூலம் தனக்கு மட்டு மின்றி பிறருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறான். அந்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இயக்கிய கதைநேரம் பல படைப்பாளிகளின் ஆக்கங்களைக் காட்சிப்படுத்தி சின்னத்திரை மூலம் அடையாளம் காட்டியது. இவருக்கான மற்றொரு சிறப்பம்சம் இவர் பெற்ற விருதுகள். இயக்கம்(வீடு, சந்தியாகிரகம், வண்ன வண்ண பூக்கள்), சிறந்த திரைக்கதை(கோகிலா, அழியாத கோலங்கள்), படத்தொகுப்பு(ஜூலி கணபதி) ஆகிய மூன்று துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே கலைஞன் என்ற பெருமை இவரையே சாரும்.
தனக்கென ஒரு தனி பாணியினை வகுத்துக் கொண்டவர்களில் பாலுமகேந்திரா முன்னோடி. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவரது தனித்துவம் எனலாம். ஒரு விதை மரமாகி அதிலிருந்து ஆயிரமாயிரமாய் விதைகளை விட்டுச் செல்லுதலே அந்த விதையின் பூரணத்துவம். பாலுமகேந்திரா எனும் விருட்சமும் அப்படித்தான் பூரணத்துவம் பெற்று நிற்கிறது. இவரிடம் உதவியாளராக பணியாற்றிய பாலா, சீமான், வெற்றிமாறன், ராம் ஆகிய இயக்குனர்கள் தனக்கென ஒரு தனித்துவத்தை வரித்துக் கொண்டவர்கள்தாம்.

Saturday 15 October 2011


1, 2, ... , 6, 7 

1, 2, ... , 5, 6 

1, 2, ... , 4, 5 

1, 2, 3, 4 

1, 2, ... , 4, 5

1, 2, ... , 4, 5

1, 2, 3, 4

1, 2, 3, 4

1, 2, 3, 4

1, 2, 3

1, 2, 3, 4

1, 2, 3, 4 

1, 2, 3, 4

1, 2, 3

1, 2, 3

1, 2, 3

1, 2, 3

1, 2, 3

1, 2, 3

1, 2, 3, 4

1, 2, 3, 4 

1, 2, 3 

1, 2, 3 

1, 2, 3

1, 2, 3

1, 2, 3

1, 2, 3 

1, 2, 3 

1, 2 



1, 2

1, 2, 3

1, 2, 3

1, 2







1, 2

1, 2, 3 

1, 2, 3, 4

1, 2, 3 

1, 2, 3 

1, 2, 3 

1, 2, 3 

1, 2, 3